எஞ்சியிருக்கிற மேன்மைகளையெல்லாம்
திரட்டிக்கொண்டே
ஒவ்வொரு தடவையும் உன்னைச் சந்திக்க வருகிறேன்.
ஒவ்வாத கூட்டத்திலிருந்து எழுந்துசெல்லும்
மனச்சாட்சிபோல திரும்பிச் செல்கிறேன்
மன்னித்துவிடு
மறக்க இயலவில்லை!
நீ அதைச் சொன்னபோது
குரலொரு குறுங்கத்தியாயிருந்தது
விழிகளிரண்டிலும் ஒளிந்துகொண்டிருந்தது வனவிலங்கு
ரத பதாகை சாமரங்களுடன் உலாவரும் சீமாட்டி
அடிமைகளின் குடியிருப்பைக் கடந்துசெல்லும்
அலட்சியமிருந்ததுன் தோரணையில்.
என் படிப்பறையின் மூலையில்
விரட்ட விரட்டப் போகாமல்
விழியிரண்டும் மின்னும் பாம்பாய்
சுருண்டிருக்கிறதுன் கேள்வி
நட்பென்றால்
வாலிலிருந்து பற்கள் வரை
குழைந்துகொண்டே ஓடிவரும்
குட்டிநாய்தான் நான்.
ஆனால்,
நீ சந்தேகித்தது
என் ஆன்மாவை
என் உயிர்ப்பை
என் வாழ்வின் உப்பை
என் எழுத்தை.
மன்னித்துவிடு
உன் கேள்வியை
மறக்க இயலவில்லை!
Published on May 10, 2013 08:11