Venba Geethayan's Blog
April 21, 2026
யாமத்தின் வாசனை
April 19, 2026
வேனிற்பூக்கள்
March 5, 2026
ஆற்றின் நிலவு
February 25, 2026
இரவுக்களிப்பு
February 21, 2026
பளிங்கு அரங்கு
October 22, 2025
மழை மோகம்
இரவின் சாளரம்
மெல்லிய மழைத்துளிகள்
இருளின் களிப்பாய் பொழிகின்றன
நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்
கொட்டும் துளிகளைத் தொட்டன
கந்தர்வ ஸ்பரிசமாய்
கைகளைத் தழுவிய துளிகள்
நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை
அவள் வாயிற்கதவத்தைத் தட்டின
முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக்
கடக்கும் பொழுதினில்
ஏற்பட்ட அணுக்கம் போன்றது
அவளுக்கும் அவனுக்குமான பற்று
தாமதிக்காமல் தாழ் திறந்தனள்
வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்
மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு
கழுத்தில் இறங்கியது
முழுவதுமாய் நனைந்து நிற்க
அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்
மீண்டும் பெரும் கார்முகிலொன்று
இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது
முதற்கதிர் எழும்வரை...
August 19, 2025
ஓவியன் தீற்றிய இடைவெளி
ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி
அவனுக்கும் அவளுக்குமிடையே
சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்
தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்
அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்
இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள்
சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள்
அவளிதழின் துளிப் புன்முறுவல்
அவன் விரலைத் தீண்டிட
நொடிநேரக் கடவுள் ஆகினன்
மறுநொடியில் உபாசகன்
மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள்
வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்
June 7, 2025
Thug life vs Adam's life
போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு படம் மோசமா எனில் நிச்சயம் கிடையாது. படம் நன்றாக இல்லை என்று விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு திரிஷா காட்சிகள்தான் காண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திரிஷா பகுதியை கத்தரித்து விட்டு இன்னும் தூக்கம் வரவைக்கும் நான்கு சண்டைக்காட்சிகளை மணி இணைத்திருந்தால் தக் இத்தனை எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார்.
திரைபடத்தின் மிகப்பெரிய குறை சண்டைக்காட்சிகள். இரண்டாம் பாதியில் அன்பறிவு மட்டுமே பெரும்பான்மையான காட்சிகளை இயக்கியது போல தோற்றம் ஏற்படுகிறது. மணிரத்னம் தனது கதாப்பாத்திரங்களை அத்தனைஎளிதாக மரணத்தில் முடித்துவிடமாட்டார். இருப்பினும் இத்திரைப்படத்தில் பலரும் சண்டைகளில் மாண்டு போகின்றனர். அத்தோடு அன்பறிவின் தாக்கம் அதீதமாகத் தெரிய காரணம் விக்ரமில் அடியாள் கூட்டத்துக்கு மத்தியில் ரோலக்ஸாக சூர்யா தோன்றும் அதே காட்சியில் இங்கே STR தோன்றி இனி தான்தான் சக்திவேல் என்கிறார். பின்னர் தக்காக ஏதாவது செய்வார் என எண்ணும்போது ஒருபுறம் கோவா, கேசினோ மறுபுறம் திருச்செந்தூர், கடல் என மணிரத்னத்தின் அழகியல் காட்சிகள் வருகின்றன. பிறகு மீண்டும் கோவா சண்டைக்காட்சிகள், படாரென தாவும் டெல்லி சண்டைக்காட்சிகள் என முதல்பாதியில் தெளிவாகக் காட்டப்பட்ட இடமும் காலமும் இரண்டாம் பாதியில் ஊசலாடுகின்றன. விக்ரம், KGF அளவிற்கான சண்டை Thug lifeக்கு தேவையில்லை. அதுவும் தற்காப்பு கலை சண்டைகள் இந்த படத்துக்கு எதற்கு எனும் வினா எழுகிறது. தமிழ் சினிமாவில் ஆபத்தான TRENDING தேய்வழக்குகள் உருவாகியுள்ளன. சாமானிய மக்களிடையே வெகு எளிதில் புழங்கும் Fruit mix பானம் போல, ஒரு திரைப்படத்தில் காமெடியா? சிறிதளவு இவர்கள், வில்லனா? இவர்களை போட்டு இரண்டு கண்டு கிண்டிவிட்டால் போதும், சாகடிக்க வேண்டுமா? அவர்களை அள்ளிப்போட்டு கதையை முடிக்கலாம், அபலையான கதாப்பாத்திரமா? இவர்களைப் போட்டு கிளறினால் முடிந்தது... இவ்வாறு தேய்வழக்காகவே தமிழ் சினிமாவில் பலர் மாறிவருகின்றனர். அன்பறிவும் அப்படியான தேய்வழக்கு Trendingஇல் சிக்கிவிட்டனரோ என்று Thug life பார்க்கும்போது தோன்றுகிறது.
முதல் பாதி மிக அழகாக தெளிந்து செல்கின்றது. ரசிக்க வைக்கும் காட்சிகள் திரிஷா-கமல், கமல் -அபிராமி, வடிவுக்கரசி கமல், STR- கமலுக்கு நடுவே நிகழும் உரையாடல்கள், வெறும் சக்திவேல்-அமரன்- இந்திராணி ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து மட்டுமே தனித்து திரைக்கதை அமைக்கலாம். அவர்கள் மூவருக்கும் இடையே உள்ள மீறல்கள் மற்றும் சிடுக்குகள்தான் இதர கதாப்பாத்திரங்களின் தன்மையையும் கதையோட்டத்தையும் முடிவு செய்பவை.
ஆனால் அவர்களை மையப்படுத்தாமல் காட்சிகள் எங்கெங்கோ செல்கின்றன. மேலும் இதில் சில அடிப்படைக் காட்சிகள் வசனங்களாக பேசப்பட்டு கடந்து போய் விடுகின்றன. உதாரணமாக கமல் ஒரு காட்சியில் அபிராமியை கிட்சனில் சமாதானப்படுத்தும் ஊடல் காட்சியில் முதல் சந்திப்பை மூன்றுவரி வசனமாகப் பேசிக் கடப்பார். அது காட்சியாக மாறியிருந்தால் அழகியல்.
மகாபாரதத்தில் சாந்தனு சத்தியவதியை மணம் செய்துகொள்ளும்போது சாந்தனுவின் மகன் தேவவிரதன் எனும் பீஷ்மன் துறவுகொள்வான். ஒருவேளை தேவவிரதனும் சத்தியவதி மீது காதல்கொண்டிருந்தால் என்னவாகும் என ஒரு கிளாசிக் திரைப்படமாக/ திரைக்கதையாக வரவேண்டிய Adam's Life, Thug life ஆகி பாதை மாறி 'பரவாயில்லை பார்க்கலாம்' commercial ரகமாக நிற்கின்றது.
January 10, 2025
பாவை மொழிகள் (4 - 6)
அரவம் துயிலும் பொருட்டு
மெதுவாய் அகழ்வில் ஊர
ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!
மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட
சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட
அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?
கிள்ளிடும் பொன்பாவாய்!
//
அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்
மடித்து வைத்த இழைப்பட்டு
கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்
கழற்றி எறிவானெனும் மதியின்றி
களவைத் தூண்டும் மடப்பட்டு
முந்தைய கூடலை நினைவுருத்தி
வருத்திடும் அணியிழையாய்!
//
புலரொளியில் நிலம்படர் ஈரம்
அவன் உள்ளங்கை மணம்
அந்த நாகலிங்கப் பூக்கள்
கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி
ஒற்றை பூவின் மணத்தை
மந்தணமாய் மெல்ல
கள்ளமாய் நகைத்திடும் மார்கழி
உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்
//
December 18, 2024
பாவை மொழிகள் - 3
வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
Venba Geethayan's Blog
- Venba Geethayan's profile
- 2 followers

