டிசம்பர் 25 – புத்தக வெளியீட்டு விழா

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

இந்த விழாவில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.

இதில் கவளம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பு வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன.

இலக்கியம் என்பது சாதாரண மனிதர்களிடமுள்ள அசாதாரணமானவற்றைக் கண்டுபிடிப்பது, அவற்றைச் சாதாரண வார்த்தைகளால் அசாதாரணமான அனுபவமாக மாற்றுவது என்கிறார் பாஸ்டர்நாக். இக்கதைகளும் அதையே மேற்கொள்கின்றன.

சதுரங்க விளையாட்டினைப் போலவே சிறுகதை எழுதுவதும் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டது. சதுரங்கக் கட்டமும் காய்களும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டவை. ஆனால் காய்களை நகர்த்தும் விதம் விளையாட்டு வீரனின் தனித்துவம். அப்படிச் சிறுகதையில் புதிய நகர்வுகளை உருவாக்கி, முடிவில்லாமல் விளையாடிக் கொண்டேயிருக்கலாம்.

இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் எழுதுவதென்பது ஒரு நபர் ஆடும் சதுரங்கம். இரண்டு பக்கத்தையும் ஒருவரே விளையாட வேண்டும். நாவல் எழுதுவதை விடவும் சிறுகதை எழுதுவதே எனக்கு விருப்பமானது. சவாலானது.

இந்தத் தொகுப்பிலுள்ள இரண்டு சிறுகதைகள் ஆங்கிலத்திலும் நான்கு கதைகள் மலையாளத்திலும் ஒரு கதை பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2024 21:54
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.