திருச்சீரலைவாய் சாப்பாட்டுக் கடை
(அசோக்நகரில் வசித்த போது எழுதியது)
திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1
மறதி குறித்த மனக் குமைச்சலோடு
வார இறுதிக் காலை விடிந்தது.
வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு
வாக்குத் தத்தம் செய்தபடி
ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு
புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன்
இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும்
ஊறுகாயாவதாய் படித்ததாலஃது.
சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும்.
பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில்
ஊரே ருசிக்கும் காப்பி அருந்த
அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு
அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன்.
நிகனொர் பர்ரா அகவிதை என்றவர் போக.
ஊர்தி என்று இலக்கிய சஞ்சிகை
ஆங்கிலத்தில் நடத்தி ஓய்ந்த
சிரித்த முகத்து சித்தனை
மத்ஸ்யம் என்று மீன்பெயர் தாங்கி
மாத்வர் நடத்தும் சைவ ஓட்டலில்
மதிய விருந்துக்கு அழைத்திருந்தேன்
நீர்தோசை, மத்தூர்வடை, பிசிபேளா ஈறாக
உத்தர கன்னடச் சமையல்
சுவை கண்டவர் அவர் கன்னட இலக்கிய
மயக்கமும் உண்டு பலநாள் சென்றெனக்கு
மறந்தது நினைவுவர சித்தர் சிவனடி புகுந்தார்.
புதுவையில் இந்தியக் காப்பியகத்தில்
கடித்துக் கொடுத்த பாதி கேக்கின்
பதிலாக பட்டிஸேரி எனும்பெயர் கடையில்
ப்ளம் கேக் வாங்கி ஊட்ட
அமேலியிடம் சொன்னதும் மறந்தேன்
அது ஆச்சு நாற்பது ஆண்டு முன்பு
அவள் இன்னும் கேட்க மறந்தாளில்லை
அச்சுவை கடந்து போனது எனக்கெப்போது
அதுவும் மறந்தேன் நினைத்தென்ன ஆகணும்.
——————————————–
(அசோக்நகரில் வசித்த பொழுது)
திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2
நுழையும்போதே சல்யூட் அடித்த
காவல்காரர் சின்னச் சிரிப்போடு
அப்புறம் கொடுங்க என்றார்
நக்கலான சென்னைச் சிரிப்பில்லை
நேசமான செட்டிநாட்டுப் புன்னகை.
அந்தக்கால சோவியத் நாட்டு
ஏரோஃப்ளோட் விமான சேவையில்
கண்டிப்பான உபசரிணிபோல்
ஓவர்கோட் பெண்கள்
வாழை இலைவிரித்த மேசைமுன்னே
இருந்துண்ண இடம் சுட்டினர்.
உளுந்து வடையா உழுந்து வடையா
பட்டிமன்றம் நீண்டுபோக வேகம் உண்ணும்
நான் பார்த்த நாலு பேரும்
இன்னும் தொலைவில் ஒரு சிலரும்
மென்றபடிக்கிருந்தது வடைகளே
என்ன வேண்டும் சொல்லும்முன்
எனக்கும் கொணர்ந்தார் வடைகள்
திருச்சீரலைவாய் வழக்கமோ என்னமோ.
சிவப்பும் பச்சையும் சற்றே கருப்புமாக
சட்டினி துவையல் சாம்பார் நிரம்பி
வாளிகள் அணிவகுக்க பாதுகாப்பில்
இட்லியோடு இன்னொரு வடையும்
மேசை வந்தது வேண்டாம் எனும்முன்;
எள்ளெண்ணெய் கூட இருந்த நினைவு.
இத்தனை அமர்க்களமாய் இட்லி தின்றால்
சீரணமாவது சிரமமன்றோ.
சுவையாய் இருப்பதாய்த் தோன்றும் முன்னர்
உண்டு முடித்து காப்பி அருந்தல்
நல்ல சுவையென டாக்டரே சொல்கிறார்
நண்பர் மற்றவர் கரித்துக் கொட்டுவார்
எனக்கு ஆழ்நினைவிலோர்
உளுந்து வடை காப்பியில் நனைந்து.
இலை எடுக்கணுமா என்று கேட்டேன்
இன்னும் சாப்பிட்டு முடிக்கலை என
அவசரக் குரல்கள் அருகே எழுந்தன.
75
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

