பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
மகளிர் தின வாழ்த்துகள்.
‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். 
————————————————————————-
5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை
ஒரு ரெண்டு நிமிசம் தாமதமா வந்ததுக்கு இந்த கூச்சல் போடுறிங்களே எத்தனை நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஏழு எட்டுன்னு நேரத்தைப் பாக்காம வேலை பார்த்திருக்கேன். அதுக்கு என்ன தனியாவா அதிகக் கூலி போட்டுக் கொடுத்தீரு?
இப்படி அவன் (கரும்புத் தோட்டத் தொழிலாளி) கேட்க (கங்காணியான) என் கோபம் உச்சத்துக்குப் போய் கையில் பிடித்த பிரம்பை எடுத்து வீசி அவன் முதுகை ரத்த விளாறாக்கிப் போட்டேன்.
குய்யோ முறையோ என்று அவன் கூச்சல் போட்டபடி தோட்டம் முழுக்க ஓட நான் அவனை வேட்டை நாய் மாதிரி பின்னாடியே துரத்திப் போய் திரும்பத் திரும்ப அடித்து காலால் அவன் கொட்டையில் எட்டி உதைத்தேன். அவன் அங்கே இருக்கப்பட்டது கூழான மாதிரி ஈன சுவரத்தில் முனக பின்னும் சந்தோஷமாக அவன் குடுமியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தேன்.
ஒரு பத்து நிமிஷம் இப்படியாக சிட்சை நிறைவேற்றி கையும் காலும் எனக்கு வலியெடுக்க ஆரம்பித்தபோது அவனை வண்டியில் கரும்பு ஏற்றுகிற ஜோலிக்குப் போக விட்டேன். ஆனாலும் என் ஆத்திரம் முழுக்க தீர்ந்த பாடில்லை.
பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு சாணிச் சுருணையை விரித்து அதைக் கிடத்தி விட்டு அதைப் பெற்றுப் போட்டவள் பிடுங்கின கரும்பை தோகை வெட்டிக் கொண்டிருந்தாள். கரும்பு யந்திரத்தில் போட வாகாக இதைச் சதா செய்யாவிட்டால் யந்திரம் ஓய்ந்து போய்விடும். மேனேஜர் துரை கத்துவான்.
பிறந்து நாலைந்தே மாசம் ஆன அந்த சவலைக் குழந்தை குரலைக் கேட்டதும் அந்தப் பெண்பிள்ளை கையில் எடுத்த தோகையையும் அரிவாளையும் அந்தப்படிக்கே தரையில் வைத்துவிட்டு நிழலுக்கு ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள். முலையை எடுத்து அதுக்குக் கொடுக்க ஆரம்பிக்கிற வரைக்கும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றேன் நான்.
அப்புறம் ஓங்கி அந்தப் பிரம்பால் அவள் முலை மேலேயே ஓங்கி அடித்தேன். திருட்டு முண்டே. வேலை நேரத்தில் என்ன சீராட்டிக் கொண்டு கிடக்கே? வரும்போதே இதையெல்லாம் முடிச்சிருக்கலாமில்லையா வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல்?
நான் சத்தம் போட அவள் என் காலில் விழுந்து குழந்தையையும் கிடத்தினாள். சாமி பால் பத்தாம அழுகிறான் பிள்ளை. பசி நேரம். நொய்க் கஞ்சி கொடுத்தா வாந்தி பேதியாவுது. வேறே வழி இல்லாம லயத்துலே இருக்கப்பட்ட காப்பிரிச்சி கிட்டே எல்லாம் கையேந்தி பால் பிச்சை வாங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு யாரும் தானம் தரலை. பிள்ளை உசிரு போகுது.
திரும்பக் குழந்தையை வாரியெடுத்த அவளை முடிக்க விடாமல் திரும்ப மார்க்காம்பிலேயே பிரம்பால் அடித்தேன். குழந்தை பிடிவாதமாகப் பிடித்த காம்பை விட்டு விட்டு வீரிடும்படி அதன் உதட்டிலும் அடி விழுந்திருக்க வேண்டும்.
அந்தப் பக்கம் தலையில் கரும்பு சுமந்து போன ஒரு கிழட்டு காப்பிரிச்சியைக் கூப்பிட்டு குழந்தையைப் பறித்து எறியச் சொன்னேன். அவள் நான் சொன்னது புரியாத பாவனையோடு அந்தச் சிசுவை வாரியெடுத்து ஓரமாக வைத்துவிட்டு அங்கே இன்னொரு காப்பிரிச்சிக்குக் கண்காட்டியபடிக்கு திரும்ப வந்தாள்.
தேவிடிச்சி போய் வேலையைப் பாருடி நாயே என்று நான் சத்தமாகச் சொல்லியபடி அடிவாங்கின பொம்பிளையை முறைக்க, அவள் எனக்குப் பின்னால் பார்த்து ரெண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டாள். நான் என்ன விஷயம் என்று பின்னால் நோக்கினேன்.
அங்கே இளம் வயசில் இன்னொரு காப்பிரிச்சி அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே கண் நிறைந்து போனது.
இப்படி மனுஷத்துவம் கிஞ்சித்தும் இல்லாமல் நான் போன மாயம் என்ன என்று அதிர்ந்து போய் எல்லாத்திலிருந்தும் விலகி நின்று நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ரத்தம் கட்டின முதுகோடு அந்தக் கருப்பன் கரும்பைச் சுமந்து போகிறதைப் பார்த்து அவனுக்கு அண்டையில் போனேன்.
அவன் முதுகை ஆதரவாகத் தடவி எந்த ஊர்க்காரனடா நீ என்று தெலுங்கில் விசாரித்தேன்.
திருக்கழுக்குன்றம் என்றான் அவன்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

