பரிவாதினி இசை மலர் – 1
வாத்திமர் நாவல் எழுதுவதற்கு இடையே பரிவாதினி இசை மலர் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,
இருபதாம் நூற்றாண்டுத் துவக்கம் முதல், மத்தியப் பகுதி வரை ஒரு இசைப் பயணமாக நீளும் மலரில் அந்தக் காலமும், இசைச் சூழலும் குறித்த ambiance உருவாக்குவதில் அபார வெற்றி பெறுகிறார் சிவகுமார். அதற்கு முதல் படியாக 1930 – 1950 வரை தமிழ் இதழ்களில் வெளிவந்த அந்தக்கால ரேடியோ, கிராமஃபோன், இசைத்தட்டு வெளியீடு விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கங்கே வைத்திருக்கிறார். ஓவியக் கலை விற்பன்னர் கோபுலுவின் அதே காலத்துக் கோட்டோவியங்கள் எழுத்துக்கு நுட்பமாக அணிசெய்கின்றன. அபூர்வான புகைப்படங்களும் ஏராளம்.
இசையும் இலக்கியமும் கைகோர்த்து வரும் மலர்ப் பக்கங்கள் தி.ஜானகிராமனைக் கொண்டாடுகின்றன. அட்டைப் படத்தில் தி.ஜானகிராமன்,, ஜானகிராமனின் ஜாலம் பற்றி வயலின் விற்பன்னர் லால்குடி ஜெயராமன் குமுதத்தில் எழுதிய வியாசம், தி.ஜாவின் இசை உலகம் பற்றிய விரிவான கட்டுரை, தி.ஜாவின் மரப்பசு நாவலில் இருந்தும், மாஸ்டர்பீஸ் மோகமுள்ளில் இருந்தும் இசை பற்றிய சிறு பகுதிகள்,, தினமணி அலுவலகத்துக்கு வந்த தி.ஜாவுடன் சந்திப்பு, தி.ஜா மறைந்தது பற்றி வண்ணநிலவன் தொலைபேசியில் தகவல் சொன்னது ..
முழுக்க Thi Jaa centric ஆகாமல் எழுத்தில் மணக்கும் இசை விளம்பும் படைப்பாளிகளான கு.ப.ரா, ந.சிதம்பரசுப்ரமணியன், லா.ச.ர, கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், கரிச்சான் குஞ்சு, எஸ்.வி.வி, தி.ஜ.ரங்கநாதன், யுவன் சந்திரசேகர் ஆகியோர் எழுத்தில் இசைப் பக்கங்கள் மலரை அலங்கரிக்கின்றன. த.ந.குமாரசாமி, சி.சந்திரசேகரன் கதைகளும் உண்டு, ‘
இசை ஆளுமைகள் கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர், மதுரை மணி அய்யர், பாலமுரளி கிருஷ்ணா,, கெம்பெ கவுடர்,, திருவிசைநல்லூர் ராமசாமி சாஸ்திரிகள், மான்பூண்டியா பிள்ளை, அங்கமாலி ஜோஸ், வீணை காயத்ரி, எஸ்.ஜி. கிட்டப்பா பற்றிய கட்டுரைகள் மலர்த் தொகுப்பை காத்திரமாக்குகின்றன. டைகர் வரதாச்சாரியார், சுஜாதா விஜயராகவன், மற்றும் சிவகுமார் ஆகியோர் தத்தம் சங்கீத நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் பகுதி நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. பொடி அனுபவங்கள் கச்சேரி இறுதியில் பாடப்படும் துக்கடா மாதிரி ரசமானவை.
.
கல்கி – மணிக்கொடி சங்கீத சர்ர்சை, கச்சேரி கேட்க வரும் ரசிக ரத்னங்கள், அரசிகக்குடுக்கைகள் பற்றிய பதிவு, கச்சேரி நடக்கும் இடத்தில் நுழைந்த சரக்கு ரயில் எஞ்சின் பற்றிய ஆர்.கே.நாராயணனின் வெடிச் சிரிப்பு ஏற்படுத்தும் கட்டுரை -மொழிபெயர்ப்பு, கதாகாலக்ஷேபம், நாட்டியம் பற்றி எழுதியவை என்றும் பகுதிகள் உண்டு.
இசைமலரின் கணிசமான பகுதிகள் 1940களின் பத்திரிகை, புனைவு இலக்கிய மொழிநடையைக் கைக்கொண்டுள்ளது நூலைச் சிற்ப்பாக்குகிறது.
மலருக்கு ஆசிரியரான தினமணி சிவகுமாருடைய அசாத்தியமான உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் துல்லியமான வாட்டர் மார்க் ஆகத் தெரிகிறது.
ஒரு சிறு கோரிக்கை – நல்ல எழுத்தில் உணர்ச்சி வசப்படுதல் அடக்கமோ என்னவோ, அங்கங்கே மிகக் கொஞ்சமாக விதந்தோதுதலும் தட்டுப்படுகிறது. விரைவில் வெளியாகும் இரண்டாம் இசை மலர் இசைக்கு மட்டும் தலையாட்டட்டும்.
Well Done Sivakumar,, LalithaRam and others of Team Parivadhin
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
