ஒரு வயதிற்குள்ளேயே
பேயறைபட்ட முகங்களாகிவிட்ட
குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும்
அச்சம் கொண்ட பெண் விழிகளை
மான் விழிகள் எனவும் –
கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும்
நம் அழகியல்பற்றி
நாம் யோசித்திருக்கிறோமா?
இரண்டுபட்டுக் கிடக்கும்
எல்லாவற்றாலும்
பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும்
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவே
தராசுமுள் நுனிக்கூடா மய்யத்தின் –
பூஜ்யத்தின் –
பேருலகினின்றும் பிறக்கும் செயல்கள்
தானில்லாமல் தானாகவே
அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றனவா
இவ்வுலகில்,
இயற்கையான ஒத்துழைப்பு எனும்
சின்னஞ்சிறு முயற்சிகளை மட்டுமே பற்றிக்கொண்டு?
எல்லாத் தடைகளையும்
வீணாற்றல்களாகும் குப்பைகளையும்
கண்டு தாண்டி
நாம் வந்துவிட்டோமா, இந்த உலகிற்கு?
Published on November 23, 2025 11:30