மெகாஃபோன் மாதவனும் கேரள சுந்தரமும்

From my book readied for Publication
மன்னர் அரங்கில் மாபெரும் கூட்டம்
வந்து சிறப்பிக்க வரவேற்கிறோம்
நாளைக்கு மாலை ஏழு மணிக்கு
தலைவர் பேசுவார் தவறாமல் வாருங்கள்.

எந்தக் கட்சி என்றாலும் கூட்டத்துக்கு
வரச் சொல்லி அழைப்பது ஒருத்தர்
மாதவன் என்ற மீட்டிங்காரன்.
மாணவன் போல வருடாவருடம்
நூறு பக்கம் கோடுகள் போட்ட
நோட்புக் சுப்பன் கடையில் வாங்கிக்
கையில் சுமந்து திரிவான் மாதவன்.

எந்தக் கட்சிக் கூட்டம் என்றாலும்
முதலில் சொல்வார் மாதவனைக் கூப்பிடு
கோவில் வாசல் தெப்பக் குளங்கரை
அரண்மனைத் திண்ணை சந்தைக்கடை
எங்கும் தேடினால் எங்கோ கிடைப்பான்
நிறுத்தி வைத்த அந்திம ரதத்தில்
தூங்கிக் கிடந்தான் ஒருமுறை; சொல்வார்.

என்றைக்குக் கூட்டம் எத்தனை மணிக்கு
யார்யார் பேசுறார் வெளியூர் நபர் யார்
கலை நிகழ்ச்சி உண்டா என்றால்
பாடுவதார், ஆடுவதார் என்பது எல்லாம்
மாதவன் நோட்புக்கில் வார்த்தைகள் ஆகும்.

பஸ் ஸ்டாண்ட் சிமெண்ட் பெஞ்சில்
ஒடுங்கிப் படுத்தொருநாள்
மாதவன் உறங்கும் நேரம்
நோட்புக்கை புரட்டிப் பார்த்தோம்
தமிழில்லை வேறு மொழியினிலே
விவரங்கள் தேதிபோட்டு
குறித்திருந்தான் மாதவன்
ஜாபர் சொன்னான் உருது என்று
உருதில் ஏது ஜிலேபி, சொன்னேன்
தெலுங்கென்று. மாதவன் எழுந்து

தோளில் சின்ன தமுக்கு மாட்டி
மெகஃபோன் குறுக்கே கயிற்றில் தொங்க
ஒற்றை ஆள் ஊர்வலமாக
மாதவன் தெருவில் நடக்கும்போது
தமுக்கை மெல்ல ஒலித்துப் போவான்.
கூடவே பின்னால் எங்கள் கூட்டம்.

தெருமுனை வக்கீல் ஐயங்கார்
வீட்டை அடுத்த காடிகானா
(என்றால் வண்டிகள் நிற்குமிடம்)
மளிகைச் செட்டியார் கடைவாசல்
மதுரை முக்கு ஊருணிக்கரை
தேர்முட்டி கதவு என்று இடங்கள்
அவனுக்குத் தெரியும் சத்தம் அதிரும்
அங்கே பேசினால் கூட்டம் சேரும்.

நோட்புக் தலைகீழாகப் பிடித்து
மெகஃபோன் வாய் அருகில் வைத்து
கூட்ட விவரம் சொல்லத் தொடங்க
சவுக்கைச் சுழற்றி எம்ஜிஆர் பாடும்
ஈஸ்ட்மென் கலர் எங்க வீட்டுப் பிள்ளை
சினிமா போல் பார்த்து இருந்து
வரிசையாய் தகவல் உதிரக் கேட்போம்.

தற்காலம் காங்கிரஸில் தீப்பொறி ஆறுமுகம்
தப்பாமல் மலையாளத் தமிழ்பேசும்
திமுக பேச்சாளார் கேரள சுந்தரம்
அதிமுக மேயர் மதுரை முத்து
எம் ஆர் வெங்கட்ராமன் மார்க்சிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் சி ஏ பாலன்
எஸ் எஸ் மாரிசாமி சுதந்திரா
எத்தனை பெயர்கள் மாதவன் சொல்ல
கேட்டு நின்றோம் சுற்றிச் சூழ்ந்து.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்
பள்ளிக்கூடம் மூடி வைத்தது
வாரக் கணக்கில் மாதக் கணக்கில்
தொடரும்போது மாதவனும்
தமுக்கு முழக்கி கூட்டமாய் நிற்க
நூற்று நாற்பத்து நாலு தடை
சர்க்கார் சேதி அறிவித்துப் போவான்
சர்க்கார் மனிதனாய்க் காக்கிச் சட்டை
அணிந்திருப்பான் அப்போதெல்லாம்.

மைக்செட் ஸ்பீக்கர் கிராமபோனில்
கட்சிப் பாட்டு இசைக்க விட்டு
கூட்ட விவரம் அமர்ந்து சொல்லி
நகர்ந்து செல்ல ரிக்ஷா வண்டி
புதிதாய் வந்து காலம் மாற
மாதவனைக் கூப்பிடக் காணோம்.

பத்து வருடம் முந்திய கூட்டத்தில்
பெருந்தலைவர் முதல்மந்திரி
காமராஜரும் கக்கனும் மஜீதும்
நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியாரும்
சிசுப்பிரமணியமும் பூவராகனும்
ஆர் வெங்கட்ராமனும் பேசுவதாக
அறிவித்து மெகஃபோன் தமுக்கு களைந்து
நோட்புக் கிழித்துக் குப்பையில் வீசி
மாதவன் தெற்கில் நடந்து போனதாக
கதர்க்கடை அலுவலர் இருவர் சொன்னார்
அப்புறம் அவனைக் காணவே இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2025 03:00
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.