மிளகு பெருநாவல் தடத்தில்
நீண்ட எண்பத்தெட்டு அத்தியாயங்களோடு பெருநாவல் மிளகு 2021 ஜூன் முதல் 2025 ஃபெப்ருவரி வரை சொல்வனம் இணைய இதழில் சீராக வெளியாகிப் பின்கதையோடு இந்த வாரம் நல்ல வண்ணம் நிறைவடைந்தது,
இந்த நாவல் எழுதிக் கொண்டிருக்கும் போதே சொல்வனம் இணைய இதழில் பிரசுரமாக நண்பர் பாஸ்டன் பாலா முன்கை எடுத்தது சிறப்பாக இருந்தது. எண்பத்தெட்டு அத்தியாயங்களை இரண்டிரண்டு அத்தியாயம் ஒரு மின்கோப்பாக வடிவமைத்து – நாற்பத்திநான்கு கோப்புகள் – நான் ஒவ்வொன்றாக அனுப்பி வைப்பேன். அனுப்பிய பிறகு எடிட்டிங்கில் மாற்றினால் (நிறைய மாற்ற வேண்டி வந்ததில்லை) சொல்வனம் போன பிரதியை அகற்றி விட்டு புதியதைப் பிரசுரிக்க வேண்டும். ஒவ்வொரு இதழிலும் மிளகு இருக்க வேண்டும். இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்தது.
சென்னபைராதேவி மிளகு ராணியாக வாழ்த்தப்பட்டு அரசாண்ட தலைநகரின் பெயர் என்ன? ஜெரஸோப்பாவா கெரஸோப்பாவா?. கன்னட எழுத்தாளர் டாக்டர் கஜானன சர்மா, எழுத்தாளார் மதுரபாரதி போன்ற நண்பர்கள் கெரஸோப்பா தான் சரியான உச்சரிப்பு என்று அறுதியிட்டு நிறுவினர். எனில் சொல்வனத்துக்குப் போன பிரதியில் ஜெரஸோப்பா. அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பிரதியில் கெரஸோப்பா என்று அமைந்தது. பாதியில் மாற்றினால், வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் குழம்பிப் போவார்கள் என்று படவே ஜெரஸோப்பா மாற்றமின்றி இருக்கிறது.
சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி. நண்பர்கள் ரவிசங்கர், பாஸ்டன் பாலா, மைத்ரேயன், நம்பி, கிரிதரன் என்று இந்தக் குழு ஒரு லட்சத்து எழுபத்தேழாயிரம் சொற்களில் (177,700) எண்ணூற்று அறுபது பக்கங்களுக்கு (860) நீளும் பிரதியைப் பொறுமையாக வாசித்துப் பிழை கண்டால் திருத்தப் பெற்று காலம் தவறாமல், வரிசை மாறாமல் பிர்சுரித்தார்கள். நன்றி.
சொல்வனத்தில் தொடர்ந்து மிளகு வாசித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். எண்பத்தெட்டு அத்தியாயங்களை ,மூன்றாண்டுகளாக வாசித்த டமில் டயாஸ்போரா ஒரு கமெண்ட் கூடப் பதிவு செய்யவில்லை. சாதனைக்கு நன்றி
சொல்வனத்தில் மிளகு தொடர, எனக்கு அற்புதமான ஒரு நட்பு கிடைத்தது – சரஸ்வதி தியாகராஜன் மேடம். எண்பத்தெட்டு அத்தியாயம் எழுபதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை, அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் காண ஒவ்வொரு பேச்சுககுரல் ஈந்து ஒலி வடிவமாக்கினார் சரஸ்வதி. மிளகு நாவலின் காத்திரமான, கம்பீரமான குரல் அவர்.. அவருக்கு என் நன்றி.
2022-ம் ஆண்டு என் இனிய பதிப்பாள நண்பர்கள் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் காயத்ரி, ராம்ஜி இருவரும் மிளகு பெருநாவலை அச்சில் கொண்டு வர, அதுவும் உடனே நூலாகப் பிரசுரமாக சுறுசுறுப்போடு நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களுக்கும் ஸீரோ டிகிரி வடிவமைப்பாளர் விஜயனுக்கும் என் நன்றி.
2022 ஜுனில் ஆயிரத்து நூறு பக்கங்களோடு மிளகு வெளிவந்தது. அந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் வாசகர்களுக்கு அறிமுகமானது
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

