Jeyamohan's Blog

November 23, 2025

சென்னையில் ஓர் ஆங்கில வாசிப்புக் குழுமம்.

அன்புள்ள ஜெ.

மானசா பதிப்பகம் புக் கிளப் பற்றிய செய்தியை பகிர்ந்திருந்தீர்கள். Manasa Book Club, Chennai. இப்படி ஒரு அமைப்பை தொடங்குவது பற்றிய செய்தியை முன்னரும் பகிர்ந்திருந்தீர்கள். மானசா பதிப்பகம், ‘புக் கிளப்’, அலுவலகத் திறப்பு. உங்களுடைய தளத்தில் நீங்கள் புக் கிளப் என்பது இன்றைய குழந்தைகளுக்கு மிக உதவியான ஒன்று என்றும், இணைய அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கான வழி என்றும் சொல்லியிருந்ததையும் வாசித்துள்ளேன். புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.

எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே எதையுமே வாசிக்காதவர்கள். பத்து வயது வரை நன்றாக நிறைய வாசித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பின் செல்போனுக்கு அடிமை. கேம்களுக்கு அடிமை. பள்ளிப் படிப்பு தவிர மற்ற நேரமெல்லாம் வேறெந்த நினைப்பும் இல்லை. வாழ்க்கையையே அதனால் இழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்போன்ற குழந்தைகளை இந்த புக் கிளப் போன்ற அமைப்புகளுக்குள் கொண்டுவர முடியுமா என்ன? இவற்றால் உண்மையாகவே ஏதேனும் பயன் உண்டா?

ஆர்.நளினி சுந்தரம்

Manasa Book Club, Chennai.

அன்புள்ள நளினி,

மின்னணு அடிமைத்தனம் பற்றி நான் முன்னரே விரிவாக எழுதியுள்ளேன். (மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்). சொல்லப்போனால் சீரான இடைவெளியில் இதை எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். நம் குழந்தைகள் மின்னணு அடிமைத்தனத்தில் சிக்கி அழிந்துகொண்டிருக்கிறார்கள். எதையும் சிறிதுநேரம்கூட கூர்ந்து கவனிக்கமுடியாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கும் அறிவுச்சவால்களை எதிர்கொள்ளமுடியாதவர்களாக ஆகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு நூல்களை வாங்கிக்கொடுப்பதோ, படி படி என ஊக்குவிப்பதோ எந்தப் பயனையும் தராது. ஒன்று, அவர்களுக்கு ‘நேரடியாக செய்யும் செயல்கள்’ தேவை. தாவர அறிமுகம், பறவை பார்த்தல் போன்றவை அவ்வாறான நேரடியான செயல்முறைகள். அவை நிலத்துடனான உறவை உருவாக்குகின்றன. கவனத்தை குவிக்கப் பயிற்றுவிக்கின்றன. இரண்டாவதாக, கூர்ந்த அவதானிப்புக்கு பழக்கமுள்ள சுற்றம் தேவை. இன்றைய குழந்தைகள் மின்னணு அடிமைத்தனத்தை நோக்கி இழுக்கப்படுவதே பிற குழந்தைகளால்தான். சரியான சூழல், சுற்றம் இல்லையென்றால் வாசிப்பை நடத்த முடியாது.

தொடர்ச்சியாக நான் சொல்லி வரும் ஒரு கருத்து, வாசிப்புப் பயிற்சி என்பது. பயிற்சி இன்றி நூல்களை வாசிக்க முடியாது. நூல்களை வாசிக்காதவர்களால் சமகால அறிவியக்கத்தை புரிந்து கொள்ள முடியாது. நூல்களை வாசிக்காதவர் சமகாலத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கும் இணையக் குப்பைகளுக்குள் சென்று சிக்கிக் கொள்ளாமலிருக்க முடியாது. வாழ்வின் பெரும் பகுதியை வீணடிக்க நேரிடும். நீண்ட கால அளவில் தன்  அறிவுத்திறனை இழந்து நவீன தொழில்நுட்பத்திற்கு அடிமையாகவும், இன்னொரு கட்டத்தில் தொழில்நுட்பத்தால் பணி நீக்கமும் ஆளுமை நீக்கமும் செய்யப்படும் சருகாகவும் ஆக நேரிடும்.

வாசிப்புப் பயிற்சியை அடைவதற்கான ஒரே வழி என்பது சிறுசிறு புத்தகக் குழுக்கள்தான். மேலை நாடுகளில் இந்த புத்தகக் குழுக்கள் மிகப்பெரிய அளவிலே வாசிப்பை முன்னெடுப்பதற்கான பங்களிப்பை ஆற்றுகின்றன. கூடி அமர்ந்து புத்தகங்களை பற்றிப் பேசுவதுதான் அது. புத்தகங்களைப் பற்றி கேட்பதே அதற்குள் நுழையும் வழி. அனைவருமே அங்கு பேசப்படும் அனைத்து நூல்களையும் படித்து விட்டு வர வேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். அந்த குழுக்களில் பங்கெடுப்பவர்களில் ஒரு சிலர் மிக நன்றாக படித்தவர்களாகவும் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். சிலருக்கு மிக எளிய அறிமுகம் அல்லது ஆர்வம் மட்டுமே இருக்கும். ஆனால் காலப்போக்கிலே அதில் ஈடுபடுகிற ஒவ்வொருவருமே புத்தக ஆர்வம் கொள்வதை, வாசிப்பாளர்களாக மாறுவதைகப் பார்க்க முடிகிறது .

நாங்கள் தொடங்கிய வாசிப்புக் குழுக்களில் கலந்து கொண்ட பலர் மிகுந்த தயக்கத்துடனும் தங்கள் அறியாமை பற்றிய தாழ்வுணர்ச்சியுடனும் வந்தவர்கள்தான். அவர்கள் இன்று சிறப்பாக பேசக்கூடியவர்களாகவும் சில குழுக்களை வழிநடத்த கூடியவர்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்பதை காண்கிறோம். புத்தகக் குழுக்களின் பணிகள் மூன்று.

அ. புத்தகக் குழுக்கள் என்பவை சரியாக நடத்தப்பட்டால் நமக்கு நூல்களை அறிமுகம் செய்தபடியே இருப்பவை.ஆ. நமக்கு வாசிப்பு மனநிலையை தக்கவைத்துக்கொள்ள உதவுபவை.இ. நமக்கு நம் வாசிப்பை பலகோணங்களில் விரித்தெடுத்து ஆழமாக்கிக்கொள்ளும் பயிற்சியை அளிப்பவை.

நாங்கள் விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் பல புத்தகவாசிப்புக் குழுக்களை நடத்துகிறோம். அவை எல்லாம் தமிழ் நூல்களுக்காக. விஷ்ணுபுரம் அமைப்பின் களம் தமிழிலக்கியம் மட்டுமே. ஆனால் மானசா புத்தகக்குழு வேறு, விஷ்ணுபுரம் அமைப்புடன் அதற்கு தொடர்பில்லை. அவர்களின் இலக்கு ஆங்கில இலக்கிய வாசிப்பை உருவாக்குவது.

தமிழகத்தில் இன்று நம் குழந்தைகளை பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தவர்கள். தொடக்கநிலை நூல்கள் படிப்பதில் அவர்களுக்கு ஓர் எளிய அறிமுகம் கல்விக்கூடம் வழியாக வருகிறது. ஆனால் அதன்பின் அவர்களில் சிலரே முதிராஇளமை வாசிப்புக்குள் செல்கிறார்கள். எஞ்சியோர் வாசிப்பை விட்டுவிடுகிறார்கள். தீவிரமான, தரமான வாசிப்பை நோக்கி செல்ல அவர்களால் இயல்வதில்லை. அதற்கான வழிகாட்டுதல்கள் நமது கல்லூரிகளில் அல்லது பள்ளிகளிலிருந்து அளிக்கப்படுவதில்லை. அந்த வழிகாட்டலுக்காகவே இந்த புத்தக குழுக்களை நான் பரிந்துரைக்கிறேன்.

விரைவாக ஓடும் குதிரையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒருவர் தன்னியல்பாகவே தானும் அதே விரைவில் ஓடத்தொடங்குகிறார் என்பது போலத்தான் புத்தகக் குழுக்களின் செயல்பாடு. அவற்றுள்ள மிகச்சிறந்த வாசகரின் தரத்தை பிறர் தாங்களும் அடைகிறார்கள். மானசா பதிப்பகம் நிகழ்த்தும் இந்த ‘புக் கிளப்’ பற்றி நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், நான் அறிந்த மிகச்சிறந்த இலக்கியவாசகர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க ஒருவரால் இது நடத்தப்படுகிறது- சைதன்யா இன்று என் ஆசிரியர்கள் அளவுக்கே எனக்கு இலக்கியம் பற்றிக் கற்பிப்பவள்.

எப்படி வாசிப்பது, எப்படி படைப்புக்களுக்கு அடியில் உள்ள கூடுதல் அர்த்தங்களை எடுத்துக் கொள்வது என்பதற்கு  எத்தனை காணொளிகள் வழியாகவும் சொற்பொழிவுகள் வழியாகவும் வழிகாட்டினாலும் அது பயனுள்ளதல்ல. தொடர்ச்சியாகச் செயபல்படும் ஒரு வாசிப்புக் குழுமம் மட்டுமே பயனுள்ளது.அத்தகைய  ஒரு கூட்டுக் குழு வாசிப்பு ஆங்கில நூல்களுக்கு சென்னை சார்ந்து அநேகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சென்னையில் ஆங்கிலம் வழியாக வாசிப்பவர்கள் மிகமிகமிகக் குறைவு. 

சென்னையிலேயே பல கல்லூரிகளில் ஆங்கிலத் துறைகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், முதுகலை பட்டம் பெற்ற்வர்களை பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆங்கில நூல்களின் வாசிப்பு விற்பனை என்பது சென்னையை பொறுத்த அளவிலே கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவிலேயே இருக்கிறது. இந்தியாவின் பதிப்பகங்கள் எவையுமே சென்னையை ஒரு புத்தக விற்பனைக் களமாக கருதுவதே இல்லை. இந்தியாவின் பதிப்பாளர்கள் எவருக்குமே சென்னையில் கடைகளோ, விற்பனைத்தொடர்பாளர்களோ இல்லை. தமிழகத்திலேயே இல்லை. பெங்களூரில் ஒரே சாலையில் ஒன்பது ஆங்கில புத்தகக்கடைகள் உள்ளன, தமிழகத்தில் ஆங்கில நூல்களுக்கான ஒரு கடைகூட இல்லை. 

ஆனால் சென்னை சேர்ந்த பெரும்பாலான பெற்றோர் ஒருவகையான பேச்சு மொழி ஆங்கிலத்தை தன் குழந்தைகளுக்கு பழக்கிறார்கள் .அந்த ஆங்கிலத்தில் அந்த குழந்தை பேசுவதைப் பார்த்து அது ஆங்கிலத்தில் திறமை மிகுந்தது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் ஆங்கிலத் தரம் என்பது வருந்தத்தக்க அளவுக்கு குறைவானது என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு நமக்கு பெரும்பாலும் ஆளே கிடைப்பதில்லை. தமிழகத்திலிருந்து தொழில்முறை மொழிபெயர்ப்புக்கு கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவானவர்கள். தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் கூட தமிழர்கள் பணியாற்றுவது மிகக் குறைவு.

இந்த ஆங்கில அறிவின்மை என்பது நமக்கு நம்முடைய கல்வி முறையில் இருந்து வருகிறது. பொதுவாக இங்கே ஆங்கிலப்படிப்புக்குச் செல்பவர்கள் பிற படிப்புகளுக்குச் செல்ல தகுதியற்ற மதிப்பெண்கள் கொண்டவர்கள். ஆங்கிலத்தையே தமிழில் புரிந்து கொண்டு மனப்பாடம் செய்து எழுதி வெல்பவர்கள். அல்லது வெறுமே ஒரு பொழுதுபோக்குக்காக ஆங்கிலம் பயிலும் உயர்குடிப்பெண்கள். அந்த பெரும் கூட்டத்தில் சிலருக்கேனும் ஆங்கிலத்தில் வாசிக்கவும், ஆங்கிலத்தில் சிந்திக்கவும் ஆர்வம் இருக்கக்கூடும். தரமான ஆங்கிலத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பைத் தேடி அவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக ஒரு வாய்ப்பை திறந்து வைக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தகக் குழுவின் நோக்கமாக இருக்கிறது

தமிழகத்தில் இன்று எங்குமே ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்திய நாவல்களைப் பற்றியோ, வெளிநாட்டுப் படைப்புகளை பற்றியோ  எந்த விவாதம் நிகழ்வதில்லை. (முகநூலில் மேலோட்டமாக பேசிக்கொண்டிருக்கும் snob களை நான் கருத்தில்கொள்ளவில்லை.) அப்படி ஒரு விவாதம் சென்னையில் ஓர் இடத்திலேனும் நிகழ்வது என்பது ஒரு தொடக்கம்.

ஜெ

at connect@manasapublications.com 

or via WhatsApp at +91 7305567808.

Venue:
Manasa Publications
Flat No: 2, Srinivas Apartments,
Gandhi Nagar 2nd Main Road,
Adyar, Chennai – 600020

Time: 10:00 AM – 12:00 PM

 

Agenda for 2025:

November:  Everything the Light Touches  by Janice PariatDecember: Childhood Friend by Vaikom Muhammad Basheer
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 10:35

ஆகமம்

ஆகமங்களின் காலம் வரையறை செய்யப்படவில்லை. அவை வெவ்வேறு காலங்களில் உருவானவை எனப்படுகிறது. இந்தியாவெங்கும் ஆலயவழிபாடு பொ.யு. 4-ம் நூற்றாண்டிற்குப்பின் குப்தர் காலத்தில் பரவி வலுப்பெற்றது. ஆகமங்கள் அதற்கும் முன்னரே வழிபாட்டு நெறிகளாக புழங்கியவையாக இருக்கலாம். ஆலயவழிபாடு பரவலான போது அவை முறையாக சம்ஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கலாம்.

ஆகமம் ஆகமம் ஆகமம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 10:33

வெளியேறியவர்களின் கதை!

வணக்கம் ஜெ,

        தத்துவ வகுப்பில் உங்களை சந்தித்துவிட்டு வந்த பின்னர் நான் வாசிப்பதோடு நின்று விடாமல் அதை தொகுத்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துள்ளேன் அதன் ஆரம்பமாக ஹெர்மன் ஹெஸ்ஸே அவர்களின் சித்தார்த்தா புத்தகத்தில் நான் பெற்றதையும் உணர்ந்ததையும் பகிர்கிறேன்.இந்தப் புத்தகமும் என் கைகளுக்கு எனக்கு மிகவும் தேவையான நேரத்தில் வந்தடைந்தது.

           நான் இந்தப்  புத்தகத்தை ஒரு கவிதையாகவே அணுகினேன்.ஒரு கவிதையின் ஆழம் எப்படி வாசகர்களைக் கொண்டு மாறுகிறதோ அதேபோல் இந்தப் புத்தகத்தின் தத்துவமும்  கவித்துவமும் வாசிப்பின் ஆழத்தை  பொறுத்தது.சித்தார்த்த வாசித்தப்பின் நான் அடுத்ததாக படிக்க வேண்டும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்த புத்தகம் Mikhail Naimy  அவர்கள் எழுதிய The  Book  of Mirdad.அந்த வகையிலும் இந்த புத்தகம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.

    சித்தார்த்தாவின் முதல் வரியே கவித்துவமாக இவ்வாறு தொடங்குகிறது “மனையின் நிழலில் படகுகள் ததும்பும் நதிக்கரையில் கோவிந்தனுடன் வளர்ந்தான் சித்தார்த்தன் “என்று ஆரம்பிக்கிறது. சித்தார்த்தன் பின்னாளில் ஒரு படகோட்டியாய் மாறி ஒரு படகோட்டியின் உதவியுடன் ஞானத்தை அடைய இருக்கிறான் என்பதை முதல் வரியிலேயே சொல்கிறார்.தன் தந்தையிடம் பிடிவாதமாக அனுமதி பெற்று சமணர்களிடம் சேர்ந்து கடினமான பயிற்சியின் மூலம் அறிவை மட்டுமே பெறமுடியும் ஞானத்தை ,நிர்வாணம் என்ற நிலையை அடைய இயலாது என்பதை உணரும் சித்தார்த்தனின் மனநிலையை நான்  முழுவதுமாக  என்னுடன் பொருத்தி பார்க்கிறேன்.கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது நான் என்ற நிலையை துறக்க முடிகிறது ஆனால் மீண்டும் அந்த நான் என்ற நிலைக்கு பயிற்சி முடிந்ததும் மனம் திரும்புகிறது .புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கும் பொழுதோ எழுதும்பொழுதோ  ஒரு மனஎழுச்சியுடன் இருக்கும் நான் அடுத்த நிமிடமே அன்றாடத்தில் விழுந்து விடுவதை இதனோடு இணைத்து பார்த்தேன்.புத்தகம் வாசிக்கும் பொழுது அந்தக் கதை மாந்தர்களுடன் எனக்கு ஏற்படும் கருணை அவர்களை அவர்களின் தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் மன இயல்பு வாழ்க்கையில் இருப்பதில்லை அந்த “நான் ” நிலைக்கு திரும்பி விடுகிறேன்.புத்தகங்கள் நமக்கு ஞானத்தை கொடுக்க முடியாது அறிவை தான் கொடுக்க முடியும் என்பதை நம்புகிறேன்.

       அடுத்து சித்தார்த்தன் கமலாவை சந்திக்கிறான்.சித்தார்த்தனிற்கும் கோவிந்தனிற்கும் நிர்வாண நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து அதனை அடைய வேண்டிய பாதையை மேற்கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே  கமலா அதை அடைகிறாள்.அவள் அடைந்தது ஞானமா? முக்தியா? என்பதை நான் அறியவில்லை ஆனால் அந்த புத்தரை பார்த்தால் அவள் அடையக்கூடிய அதே உணர்வை அவள் அடைந்தாள் .ஏன் அவளுக்கு அது கிட்டியது? தன்னிடம் இருந்த செல்வத்தை ,இளமையை ,செருக்கை ஒவ்வொன்றாக உதறியதால் பெற்றாளா?

நிர்வாணா என்பது உண்மையான ஆனந்தம் என்று பொருள். கமலா அடைந்ததும் ஆனந்தம்.

          சித்தார்த்தனிடமிருந்து  கமலா காட்சியின் மூலம் அதாவது அவனது முகத்தைக் காண்பதின் மூலம் அடையும் ஆனந்தத்தை கோவிந்தன் சித்தார்த்தனை ஸ்பரிசிப்பதின் மூலம் அதாவது முத்தமிடுவதன் மூலம் அடைகிறான்.You cannot teach wisdom ,you can attain wisdom only through experience . காட்சி மற்றும் ஸ்பரிசத்தின் மூலம் ஞானம் அடைவது எனக்கு கவித்துவமாக இருந்தது .சித்தார்த்தன் மற்றும் வாசுதேவன் இடையே நிகழும் உரையாடல் அருமையான இடங்கள்.காலம் பற்றிய வரிகள் “காலம் என்பது ஒன்று கிடையாது ,ஏக காலத்தில் ஆறு எங்கெங்கும் இருக்கிறது,மூலஸ்தானத்திலும் முகத்துவாரத்திலும் ,நீர் வீழ்ச்சியிலும் , ஓடத் துறையிலும் ,மேகத்தும் ,விரி கடலிலும் எனவே நிகழ் காலம் ஒன்றுதான் அதற்கு உண்டு ” இந்த வரிகள் இந்த நிமிடத்தை முழுவதுமாக  வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்.நான் ,என் தந்தை  மற்றும் என் பிள்ளை வேறு வேறு அல்ல எல்லாம் ஒன்றே என்ற அந்த புரிதல் .காலம் என்பது இல்லை என்ற உணர்தல்  மிக எளிமையாக சொல்லப்பட்டது .

           வாசுதேவன் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு மக்களை சேர்ப்பிக்கும் படகோட்டியாக அமைத்து  நதியிடம் பேசுவது மற்றும் நதி பேசுவதை உற்று கவனிக்கும்  ஆற்றலை(Art of Listening ) பயிற்றுவிக்கும் ஆசானாக வடிவமைத்து இருப்பதுதான் இந்த நாவலில் என்னை கவர்ந்த விடயம்.இயற்கையோடு இணைந்து இருப்பவர்கள் ஞானிகள் .இயற்கை நம்மிடம் உரையாடிக் கொண்டு இருக்கிறது ஆனால் நாம் அதை கேட்பதில்லை.இந்த இடத்தில் எனக்கு கவிஞர் தேவ தேவன் அவர்களிடம் ஒரு முறை “நீங்கள் ஏன் உதிர்ந்த இலைகளைப் பற்றி நிறைய கவிதைகள் எழுதுகிறீர்கள் ?”என்று கேட்டதற்கு, “அந்த இலைகள் என்னிடம் ஏதோ கூற விளைவது போல் இருக்கிறது அதனால் எழுதுகிறேன் ” என்று கூறியது என் நினைவில் வந்தது .

நன்றி ஜெ,

மதுநிகா சுரேஷ் .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 10:31

நெருப்பு ஓடு  — கல்பனா ரத்தன்

 

தேவி லிங்கம் தமிழ் விக்கி

தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவல்  பிறகு பதிப்பகத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 நெடும் பட்டியலில் இடம் பெற்றது.இவரது, ‘ நெய்தல் நறுவீ’ கவிதைத் தொகுப்பு மற்றும் கிளிச்சிறை சிறுகதை தொகுப்பும் வேதாரண்யம் பாரதிதாசன் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவரது சிறுகதைகள் நிறைய இதழ்களில் வெளிவந்துள்ளன. பரிசுகளும் பெற்றுள்ளன.

நெருப்பு ஓடு நாவல் பொற்கொல்லர்கள் சமூகம், நகை செய்பவர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது.  கதையின் நாயகன் கதிர்வேலின் பார்வை வழியாக நாவல் விரிகிறது.பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்த அவன் தன் அப்பாவின், தாத்தாவின், தன் குடும்பத்தின், குடும்ப உறுப்பினர்களின், குடும்பத் தொழிலின் நிலை  எல்லாவற்றையும் தங்கத்தை தட்டித் தட்டி ஆபரணம் ஆக்குவது போல முழுமையாக்கி இருக்கிறான்.

கதிரின் தாத்தா கந்தசாமி பத்தர் அந்தக் காலத்தில் நகை செய்யும் தொழிலில் திறமை வாய்ந்தவர். நிறைய சொத்து பத்துகள் சேர்த்தாலும் தான தர்மங்கள் செய்து, குடும்பத்தினருக்கு வேண்டியவற்றை செய்து தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருந்தவர். நான்கு மகன்களில் மூன்று பேர் பொறுப்பற்றவராக இருந்தாலும் கதிரின் அப்பா செல்வம் மட்டும் தன் சொந்த காலில் நின்று வேலை பார்க்கிறார். அவருக்கு தன் பிள்ளைகள் யாரும் தன் தொழிலுக்கு வராதது வருத்தம். தன் மூத்த பேரன் கதிர் மீது மிகுந்த பாசம். தனக்குப் பின் அவனாவது நகைத் தொழிலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்.

கதிர் சிறுவனாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி வீட்டு நினைவுகளை, மூத்த பேரனாக தான் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்கிறான். நகைகள் பற்றிய நகைத் தொழில் பற்றிய நுட்பமான விஷயங்களை கண்டறிகிறான். 

ஒரு கட்டத்தில் சில சம்பவங்களால் அமைதியாகிறான். தன் தாத்தா ஆசைப்பட்ட படியே நகைக்கடை வைக்கிறான். இந்த நாவலை ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையாகப் பார்க்கலாம்.

 அதற்குள் தாத்தா பாட்டி பேரன் பாசம், பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மை, சமையலே கதி என்று கிடக்கும் பாட்டி, தன் கணவர்களின் நிலை அறியாத மனைவிகள்,  தன் கணவனின் காதல் அறிந்தும், அவனை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போராடும் கதிரின் அம்மா, வாழ்க்கையில் அடி நிலைக்கு வந்துவிட்டதை எண்ணி வருந்தும் கந்தசாமி பத்தர், நகைத் தொழில் நசிவடைவது  என நிறையக் கதைகளை உள்ளடக்கி உள்ளது.

துறை சார்ந்த தொழில் சார்ந்த நாவல்கள் கதைகள் பெண்கள் எழுதுவது வரவேற்புக்குரியது. நகைத் தொழில் சார்ந்த நிறைய விஷயங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் தேவி லிங்கம். நகை செய்பவர்களின் நேர்மை ஒரு பக்கம், பணம் வந்ததும் ஆடம்பரமாக செலவு செய்து கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம். 

 அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் பாஷை, சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணுபவர்கள், தெரிந்தோ தெரியாமலோ திருட்டு நகை கொள்முதல் பண்ணி கஷ்டப்படுபவர்கள், மிஷின்களின் ஆதிக்கம், பெரிய வியாபாரிகள் கைக்கு நகைத் தொழில் போனது,  விஸ்வகர்மா சமூகத்தின் ஐந்து பிரிவுகள் பற்றி, அந்த சமூகத்து பெண்கள் போடும் இரண்டு தாலி, மூணு தாலி பற்றி என எல்லாவற்றையும் துல்லியமாக கதைப்போக்கிலேயே சொல்லி விடுகிறார்.

சிறுவயதில் நாம் பார்த்த சிறிய தொழில்கள் எல்லாம் காலங்கள் மாற மாற கார்ப்பரேட்டுகளின், பெரிய கம்பெனிகளின் மாயக் கரங்களுக்குள் சிக்கி நம் கண் முன்னே காணாமல் போவது வலி மிகுந்த துயரம். இந்த நாவலும் அதைப் பற்றித்தான் பேசுகிறது.

“ காப்பவுன மாப்பவுனு எடுத்துப்பான் பத்தன் “  போன்ற நகைத் தொழில் செய்பவர்களை இழிவுபடுத்தும் பழமொழிகளைக் கண்டு கோபப்படுகிறார் கந்தசாமி பத்தர். அவருக்குத் தெரியும், நகை செய்பவர்களின் வாழ்வாதாரம் என்றும் ஒரே நிலையிலேயே உயராமல் இருக்கிறது என்று.

 ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புமே நகை மற்றும் நகை சம்பந்தமாக வைத்துள்ளது அழகிய ஆபரணமாக மிளிர்கிறது.

தேவி லிங்கம் முன்னுரையில் தன்னைச் சுற்றி நிகழ்வதை கூர்ந்து கவனித்து தன் மனதுக்குள்ளையே பேசிப் பார்ப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் கதையின் பாத்திரங்களும் தங்களுக்கு நடக்கும் விஷயங்களை, அனுபவங்களை தங்கள் மனதுக்குள் பேசிப் பார்த்து தத்துவார்த்தமாக சிந்திப்பது அழகு.

“ நம்ம வாழ்க்கையில் எதை முக்கியமா எடுத்துக்களும் எத தகவலா எடுத்துட்டு போகணும்கிறது முக்கியம் “

 இதுபோன்ற தத்துவார்த்த சிந்தனைகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

தேவி லிங்கம் கூறியது போல் நிறைய பெண்களுக்கு தங்கள் திருமணம்,குழந்தைகள்,கடமை என்று  எல்லாவற்றையும் முடித்த பின்னர் தான் எழுத வர முடிகிறது என்பது சத்தியமான வலி மிகுந்த வார்த்தைகள். தாமதமாக வந்தாலும் தரமான எழுத்துக்களைத் தருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதை வேதாரண்யம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது. காலம் ஏணிப்படிகள் திரைப்படம் வெளிவந்த சமயம். பவுன் நானூறு ரூபாய்க்கு விற்ற காலம். பெண்களுக்கு ரேடியோ திரைப்படம் பாடல்கள் தவிர வேறு பொழுது போக்கு கிடையாது. சமூக கட்டுப்பாடுகள் பெண்களை அழுத்தி அழுத்தி பெண்களின் ஆசைகள் கனவுகள் நிறைவேறுவதற்கான கதவுகளை இழுத்து மூடி விடுகின்றன.

பெண்களின் ஏக்கங்களும் நிராசைகளும், பள்ளி கல்லூரி செல்வதற்கு கூட பெற்றவர்களின் முடிவே பிரதானமாக உள்ள நிலை, காதல் காமம் எல்லாம் எட்டாப் பொருளாக இருக்கும் காலம், மூடிய கதவுகளைத் தட்டித்தட்டி புறவாசலைத் திறந்து தங்களுக்கான சுதந்திரத்தை தேடும் பெண்களும் இருக்கிறார்கள்.

 இதெல்லாம் பெண்களாலே தான் உண்மையாகப் பதிவு செய்ய முடியும்.கதிர்வேல் வாழ்க்கையிலும் மெல்லிய தென்றலாக ஒரு காதல் வருகிறது.காதலிலே ஆரம்பித்து காதலுடன் நாவல் நிறைவடைகிறது. சிறுவனாக இருக்கும்போது ஜெயலட்சுமி பாட்டியிடம் உங்கள மாதிரி ஒரு பெண்ணை நான் காதலிப்பேன் என விளையாட்டாக சொல்கிறான். திருமணம் முடிந்து குழந்தைகளும் வந்தபின் காதம்பரி  அவன் வாழ்வில் வருகிறாள். தன் பாட்டியின் குரலையும் சாயலையும் காதம்பரியிடம் கண்டடைகிறான்.

தேவி லிங்கத்திற்கு ஒரு நாவலை தங்கு தடை இன்றி இயல்பான மொழியில் கொண்டு செல்லும் லாவகம் நேர்த்தியாக வந்திருக்கிறது.நாவலில் கதிரின் வார்த்தைகளாக வரும்,  “  பூமியில் பிறந்த படைப்புல எல்லா உயிருக்கும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. அதை கண்டறிவது தான் அவரவர் பொறுப்பு “.

தேவி லிங்கம் தனக்கான வசீகரத்தை தன் எழுத்துக்கள் வழியே கண்டடைந்து விட்டார்.அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

கல்பனா ரத்தன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 10:31

வெள்ளிமலை தியானம்

கலந்து கொண்ட பெரும்பாலானோர் இள மற்றும் நடுத்தர வயதினர்.  வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளவர்கள்.  பணி ஓய்வு பெற்ற எனக்கோ அவ்வாறான பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை.  ஆனாலும் ஒரு நிறைவின்மையும், ஏதோ தவற விடுகிறோம் என்ற அலைக்கழிப்பும் இருந்து கொண்டே இருந்தன.  

வெள்ளிமலை தியானம்

I don’t know if we can thank you enough Sir . This “heart-felt thank you “ is not just for how nicely and meticulously you planned the whole episode of the music sangamam ( knowing its complexity)

About music
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 10:30

November 22, 2025

ஆலயக்கலை அறிமுக வகுப்புகள்

ஆலயக்கலை அறிமுகப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.

ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.

ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.

பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள். இடமிருப்பவை

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி

ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.

இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.

ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.

நாள்  நவம்பர் 28 29 மற்றும் 30

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

யோகப்பயிற்சி- முதல் நிலை

சௌந்த்ர் ராஜன் தமிழ்விக்கி

எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.

சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.

யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.

நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14 

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)

தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.

தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில்  சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.

ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.

இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.

வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.

நாள் டிசம்பர் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

Introduction of Indian Philosophy Classes in English

We have been conducting Indian philosophy classes for over three years, with around 500 to 600 people having completed the first level across nine batches. Further-level classes are currently ongoing.

Many aspirants have expressed interest in attending these classes in English. As a result, we are launching the same classes in English for those who are not proficient in Tamil.

This class offers a thorough introduction to Indian philosophy, serving as the foundational starting point for advanced courses. The instruction will be conducted in English.

Date: January 2, 3, and 4 (Friday, Saturday, and Sunday), 2026

Venue: Nityavanam, at the hill station Vellimalai, near Erode.

For contact programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 18:22

நம் பிள்ளைகளிடம் சொல்லவேண்டியது…

நம் பிள்ளைகளிடம் பொருளியல் பற்றிப் பேசுகிறோம். ‘ஜாக்ரதையா இரு’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அதைவிட முக்கியமாக நாம் அவர்களுக்குச் சொல்லவேண்டிய ஒன்று உண்டு. அது என்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 10:36

நீலகண்டம் – சுக்கிரி உரையாடல் – இன்று மாலை

அன்புள்ள ஜெ,

கடந்த அக்டோபர் 13 அன்று சுக்கிரி நண்பர்கள் சார்பாக பழனி ஜோதி எழுத்தாளர் சாம்ராஜின் ‘கொடைமடம்‘ பற்றிய தன் வாசிப்பை முன்வைத்தார். ஒரு சமகால நாவலின் கூறுமுறையும், முன்னும் பின்னும் கலைந்து அடுக்கப்படும் வரலாற்றுச் சம்பவங்கள் நாவலில் ஒன்றுக்கொன்று இணையும் விதத்தையும் பழனி தன் உரையில் விளக்கினார். 

அதன் பின் நண்பர்கள் தங்கள் வாசிப்பையும் கேள்விகளையும் எழுப்ப, ஆரம்பம் முதலே ஸூம் இணைப்பில் இருந்த சாம்ராஜ் அதற்கான தன் கருத்துகளையும் பதில்களையும் கூறினார்.  நாற்பதுபேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் இணைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கும், அந்த நிகழ்வின் விவரங்களை தளத்தில் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி. அந்த இணைய நிகழ்வின் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.  

நவம்பர் மாதத்திற்கான நாவல் சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்‘.  வாசிப்பைப் பகிர்பவர் கொரியாவில் வசிக்கும் நண்பர் சதிஷ். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அழைப்பிதழில் உள்ள ஸூம் இணைப்பைப் பயன்படுத்தி ஆர்வமுள்ள நண்பர்கள் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு பங்கேற்க வேண்டுகிறேன்.  கலந்துகொள்ள வேண்டுகிறேன். 

***

ZOOM Meeting link:

https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09 

Meeting ID: 818 2428 7154

Passcode: 197116

அக்டோபர் 12, ஞாயிறு மாலை 5 மணி (இந்திய நேரம்)

***
சுக்கிரி சிறுகதை கூட்டுவாசிப்பு – சனிக்கிழமை, மாலை 5 மணி (இந்திய நேரம்)
***

அன்புடன்,
ராஜேஷ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 10:36

அரசியலின்மைதான் காரணமா?

அரசியல்நீக்கம் அரசிலும் எழுத்தாளனும் சொல் உன் அரசியல் என்ன? அரசியலின்மை என்னும் தவம் நான் எழுதும் அரசியல்

அன்புள்ள ஜெ,

மதிப்புறு முனைவர் பட்டம் பெறுவதற்கு வாழ்த்துக்கள். கல்வித்துறை பொதுவாக தீவிர நவீன எழுத்தாளர்களை அகற்றி வைத்திருப்பதற்கான காரணங்களைச் சொன்னீர்கள். முதன்மையான காரணம் என எனக்குப் படுவது நவீன எழுத்தாளர்கள் சமகாலச் சிக்கல்களை எழுதுவதில்லை என்பதும், அவர்கள் தனிமனித அக அலைச்சல்களை மட்டுமே எழுதுகிறார்கள் என்பதும்தான். அவர்கள் அரசியலை புறக்கணிக்கிறார்கள். சமகாலத்தையும் புறக்கணிக்கிறார்கள். கல்வித்துறையானது சமூகவியல், வரலாறு ஆகிய துறைகளைச் சார்ந்தே படைப்புகளைப் பற்றிப் பேச முடியும். தனிமனித அக ஓட்டமாக உள்ள படைப்புகள் அதற்கு அன்னியமானவை. இதுவும் ஒரு காரணம் அல்லவா?

முனைவர். அ.நாகராஜன்

அன்புள்ள நாகராஜ்,

தமிழ் நவீன இலக்கியவாதிகள் ‘மக்களால்’ ஏற்கப்படாமலிருப்பதற்கும், கல்வித்துறையால் மதிக்கப்படாமலிருப்பதற்கும் காரணம் தமிழ் நவீன இலக்கியத்தில் உள்ள ’அரசியலின்மை’ அல்லது ’அரசியல் எதிர்ப்பு மனநிலை’யே என்றும், அவர்களிடமுள்ள சமகாலத்தை புறக்கணிக்கும் தன்மையின் விளைவாக நவீனப்படைப்பாளிகள் ‘மக்களிடமிருந்து அன்னியமானார்கள்’ என்றும் இன்று சிலர் பேசி நிறுவ முயல்கிறார்கள். இன்று திராவிட கட்சியரசியலுக்குள் தலையைவிட்டு சில்லறைகளுக்காக ஏங்கும் கோஷ்டி அதை மேடைமேடையாகச் சொல்கிறது.

ஆனால் இதை நேற்று இடதுசாரி எழுத்தாளர்கள் இதைவிட மூர்க்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். அதன்வழியாக இலக்கியச் சாதனையாளர்களை மக்கள் விரோதிகள் என்று வசைபாடிச் சிறுமை செய்தனர். நவீன இலக்கியத்தையே குறுங்குழு இலக்கியம் என்று முத்திரை குத்தினர். இன்று அவர்களால் அன்று வசைபாடப்பட்ட ஒவ்வொருவரையும் இலக்கியச்சாதனையாளர்கள், முன்னோடிகள் என்று சொல்லி உரிமை கொண்டாடுகின்றனர்

நவீன இலக்கியவாதிகளை மக்கள்விரோதிகள், குறுங்குழுவினர் என்றெல்லாம் பேசிய எவரும் இன்று எங்கும் இல்லை. நேற்று இதே குரலில் இலக்கிய முன்னோடிகளை தாக்கிக்கொண்டிருந்த முதன்மை ஆளுமை இளவேனில் என்பவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இருந்தார். எவருக்காவது தெரியுமா அவரை? இவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

’மக்களுடன் நின்று பேசுதல்’ என்பதை ஒரு பெரிய அளவுகோலாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுடன் நிற்பது என்று இவர்கள் சொல்வது என்ன? இவர்களின் பார்வையில் இவர்கள் சார்ந்துள்ள கட்சிதான் மக்களின் மெய்யான பிரதிநிதி, ஆகவே இவர்களின் கட்சியுடன் நிற்பதுதான் மக்களுடன் நிற்பது. அப்படி நிற்காத அனைவருமே மக்கள் விரோதிகள். எழுத்தாளன் இவர்களுடன் இணைந்திருந்தால் மட்டும்போதாது, இவர்களின் தலைமை சொல்வனவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பச் சொல்லவேண்டும், இல்லையேல் அந்த எழுத்தாளன் துரோகி ஆகிவிடுவான். இந்த மொண்ணைத்தனத்தை இலக்கியத்திற்கு எதிரான ஒரு பெரிய அறிவார்ந்த நிலைப்பாடாக சித்தரிக்கும் முயற்சியில் இன்று முதிரா அறிவுஜீவிகள் சிலரும், கலையுணர்வு அற்ற எழுத்தாளர் சிலரும் ஈடுபட்டு இருக்கிறார்கள் ஆனால் இது எந்த வாசகனுக்கும் புரியும் எளிமையான அடிப்படை விஷயம்தான்.

இலக்கியம் என்பது ஒரு தனி மனிதனின் அகநிலைப்பாடாகவே முதன்மையாக கருதப்படுகிறது. அவன் தன்னுடைய ஆழுள்ளத்தை, தன்னுடைய கனவை மொழியினூடாக வெளிப்படுத்துவதற்குப் பெயர்தான் இலக்கியம். அது சமூகத்தின் ஆழுள்ளத்தின் வெளிப்பாடு கூட. ஏனெனில் அவன் எழுதும் போது தன்னுள் ஆழ்ந்து சென்று சமூகத்தின் ஆழுள்ளத்தையே  தன்னுடைய கனவாக வெளிப்படுத்துகிறான். ஒரு படைப்பாளியின் தவம் என்பதே தான் என அவன் உணரும் பிரக்ஞையைக் கடந்துசென்று, ஒட்டுமொத்த மானுடத்தின் பிரக்ஞையின் ஒரு துளியாக ஆவதுதான். அப்படி அவன் ஆகும்போது மட்டுமே உயர்படைப்பு வெளிப்படுகிறது. இதை எல்லா படைப்பாளிகளும் சொல்லியிருப்பார்கள். ஒரு பேட்டியில் தேவதச்சன் தன் வயது பல ஆயிரம் ஆண்டுகள் என்கிறார்.

ஒரு படைப்பாளியை அளவிடும் இலக்கணம் என்பது முதன்மையாக அவன் அவனுடைய காலகட்டத்தின் குரலாக தன்னியல்பாக எப்படி ஒலிக்கிறான் என்பதுதான். அவனை அறிந்தால் அப்பண்பாட்டை அறிவதுதான். அந்த சமூகத்தின் ஆழ்மனதை அறிவதுதான். தகழியும், பஷீரும், எம்.டியும்தான் கேரளப்பண்பாட்டை அறிவதற்கான வழிகள். புதுமைப்பித்தனும், சுந்தர ராமசாமியும், ஜெயகாந்தனும், கி.ராவும்தான் தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கான உண்மையான வழிகள். ஆனால் மக்களைத் திரட்டி, அவர்களின் பொது அம்சத்தை ஆராய்ந்து அறிந்து, அதை தன்னுடைய படைப்புகளின் ஊடாக ஒருவன் திட்டமிட்டு முன்வைப்பான் என்றால் அவன் மக்களின் ஆழத்தின் பிரதிநிதி அல்ல. அவன் உண்மையில் மக்களின் மேலோட்டமான உணர்வுகளையே வெளிப்படுத்துகிறான். பெரும்பாலும் திரளுணர்வுகளை. அதையே இதழியலும், அரசியலும் வெளிப்படுத்துகின்றன.  அது இலக்கியத்திற்கு எந்த வகையிலும் முக்கியம் அல்ல.  இலக்கியத்தின் நோக்கம் அதைச் சொல்வது அல்ல. மக்களால் அறியப்படாத மக்களின் ஆழம் வெளிப்படும் போது இலக்கியம் முக்கியமாகிறது. அதை இலக்கியவாதி தன் அறியாத ஆழத்தில் இருந்துதான் எடுக்க முடியும். அதை மொழிவழிக்கனவாகவே சென்றடையமுடியும். அவதானித்து ஆராய்ந்து தொகுத்து வகுத்து அதைச் சென்றடைய முடியாது. ஆகவே தான் மாபெரும் அரசியல் தலைவர்கள், உண்மையான மக்கள் தலைவர்கள் எழுதுவது கூட பெரும்பாலும் இலக்கிய படைப்புகளாக கருதப்படுவதில்லை. சத்யமூர்த்தியோ, ராஜாஜியோ,ஈ.வெ.ராவோ, சி.என்.அண்ணாத்துரையோ, ஜீவாவோ எழுதியவை இலக்கியம் அல்ல. அவற்றுக்கு கருத்து மதிப்பு  உண்டேஒழிய இலக்கியப் படைப்பு என்னும் மதிப்பு இல்லை.

இவ்வாறு ஓர் எழுத்தாளர் தனித்துச் செயல்படுவதனால், தன் உள்ளத்தை மட்டுமே தன் வெளிப்பாட்டுக் களமாக கொள்வதனால் அவனால் எந்த அமைப்பு சார்ந்தும் செயல்பட முடியாது. அரசியல் கட்சிகள் எதிலும் அவனால் முழுமையாக ஒன்ற முடிவதில்லை. எந்த ஒரு இயக்கத்தின் ஒரு உறுப்பாகவும் அவனால் பொருந்த முடிவதில்லை. எந்த அமைப்புக்கும் விசுவாசத்தை அளிக்க முடிவதில்லை. வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் மெய்யான இலட்சிய வேகத்துடன் அரசியல் இயக்கங்களை சார்ந்து செயல்பட்ட படைப்பாளிகள் கூட அதிலிருந்து விலகிவிட்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் முரண்பட்டு, மெல்ல தங்கள் சொந்தக்குரலை கண்டடைந்து முன்னகர்கிறார்கள். மாக்ஸிம் கார்க்கி முதல் அதற்கு ஏராளமான உதாரணங்கள். காந்திய இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட கா.சி.வேங்கடரமணி, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் அதனுடன் முரண்பட்டு விலகினார்கள். இடதுசாரி இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட சுந்தர ராமசாமியும், கி.ராவும், ஜி.நாகராஜனும், ஜெயகாந்தனும் அவ்வாறு விலகினார்கள். அதை தவிர்க்கவே முடியாது.

இலக்கியவாதி சமகாலத்தை பிரதிபலிக்கவில்லை. சமகாலத்தின் ஆழத்தை மட்டுமே பிரதிபலிக்கிறார். அவன் இதழியல் யதார்த்தத்தை எழுதுவதில்லை. வரலாற்று யதார்த்தத்தை எழுதுவதில்லை. அகயதார்த்தைதை மட்டுமே எழுதுகிறான். ஆகவே சமகாலத்து எந்த அமைப்புமே அவனுக்கு ஒரு வகையில் பின்தங்கியதாகவும் அவன் முரண்படக்கூடியதாகவும் இருக்கிறது. அவனுடைய கனவு என்பது எதிர்காலம் நோக்கியதாக இருக்கிறது. ஒரு பண்பாட்டின் வளரும் முனை என்று அவனைச் சொல்லலாம். சமூகத்தின் வளர்ந்த விளிம்பில் இருந்து அடுத்த கட்டத்திற்கு தளிர்விட்டுக் கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தாகங்களும் அவனுடைய கனவுகளும் நாளைக்கானவையாக இருக்கின்றன. சமகாலத்திலேயே நின்றுவிட்ட எவராலும் நவீன இலக்கியத்தை உள்வாங்க முடியாது. அமைப்புகளும் அரசியலும் இலக்கியவாதிக்கு அந்நியமானவையாக இருப்பது இதனால்தான்.

நவீன் இலக்கியம் அரசியலை மறுக்கவில்லை. தமிழ் நவீன இலக்கியத்தின் முதன்மை ஆளுமைகள் அனைவருமே வெவ்வேறு அரசியல் களங்களின் செயல்பாடுகளுடன் இணைந்திருந்தவர்கள்தான். அந்த இணைப்பு தற்காலிகமானது என்பதுதான் உண்மை. நவீன இலக்கியத்தில் பதிவான அளவிற்கு சமகாலம் வேறெந்த களத்திலும் பதிவானதில்லை. அரசியல்வாதிகளின் நினைவுக்குறிப்புளில் சமகாலம் மிக மங்கலாகவும், அவர்கள் நோக்கில் வளைக்கப்பட்டும், அவர்களை மட்டுமே மையமாக்கியும் மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழக வரலாற்றை அறிய உண்மையில் இலக்கியம் அன்றி வேறு வழியே இல்லை.

உதாரணமாக இன்று ஒருவர் விடுதலைப்போர் பற்றி படிக்கவேண்டும் என்றால் கா.சி.வேங்கடரமணியின் தேசபக்தன் கந்தன், ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் முதல் சி.சு.செல்லப்பாவின் சுதந்திரதாகம் வரை பல படைப்புகள் உள்ளன. நெருக்கடி நிலை பற்றி தமிழில் ஏதேனும் படிக்க வேண்டும் என்றால் தமிழ் நவீன இலக்கியமே ஒரே வழி. பொன்னீலனின் புதியதரிசனங்கள், அசோகமித்திரனின் இன்று என மிக நுணுக்கமான பதிவை அவர்கள் பெறலாம். திராவிட இயக்கம் உருவான விளைநிலத்தை அறிய விரும்புபவர் வாசிக்கவேண்டிய நூல் பாவை சந்திரனின் நல்ல நிலம்தான்.

நவீன இலக்கியத்தில் இருப்பது அரசியலின்மை அல்ல. அது கலைஞனின் அரசியல். திரளின் பார்வையோ அமைப்பின் பார்வையோ இலக்கியத்தில் இல்லை, கலைஞன் வழியாக வெளிப்படும் பண்பாட்டின் ஆழத்தின் பார்வை மட்டுமே உள்ளது. அது எளிய சமகால அரசியல் அல்ல, காலம்கடந்த அரசியல். ஆகவே அது நடைமுறை அரசியலைப் பேசுவதில்லை. மானுட அரசியலைப் பேசுகிறது. அதைப்பேசினால்தான் அது இலக்கியம். ஏதேனும் அதிகாரத்தரப்பின் குரலாக ஒலிப்பது கலையின் பணி அல்ல. அதைச் செய்பவர்கள் அதற்கான லாபத்தை அடையலாம், கலைஞன் என்று சொல்லிக்கொள்ளக்கூடாது. அது எந்தத்தரப்பானாலும் சரி.

நம் கல்வித்துறையின் பிரச்சினை அதில் இலக்கிய வாசகர்கள் இல்லை என்பது மட்டும்தான். நம் மக்களின் பிரச்சினை அவர்கள் இலக்கியத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை, ஆகவே படிப்பதே இல்லை என்பதுதான். நம் மக்களுக்கு முதன்மை ஆர்வம் சினிமா (அதன் உள்ளடக்கம் காமம்), அதன்பின்  அரசியல் (அதன் உள்ளடக்கம் சாதி), அதன்பின் சாப்பாடு, வேறேதுமில்லை. அந்த மூன்றுமே அடிப்படை விலங்கு இச்சைகளின் வெளிப்பாடுகள். இலக்கியத்தை வாசிக்க, கலைகளை ரசிக்க தமிழ்ச்சூழலில் எந்த அறிமுகமும் கிடைப்பதில்லை. எந்தப் பயிற்சியும் எங்கும் அளிக்கப்படுவதில்லை. இதுதான் பிரச்சினை. இதை மறைத்து பழியை இலக்கியம் மீதும், கலைகளின் மீதும் போடுவது மக்களை இந்த விலங்குநிலையிலேயே வைத்துக்கொள்ள விரும்பும் அதிகார அரசியல்வாதிகளின் பேச்சுமட்டுமே.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 10:36

மாயாவி

தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். கலைமகள், கல்கி ஆகிய இதழ்களில் தொடர்கதைகளாக அவை வெளிவந்தன. பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட உணர்ச்சிகரமான கதைகளை எழுதினார்

மாயாவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 10:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.